திருவெழுக்கூற்றிருக்கை

(அருணகிரிநாதர்)

 


ஓருரு வாகிய தாரகப் பிரமத்

தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை


இருபிறப் பாளரி னொருவ னாயினை

ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

மூவரும் போந்து இருதாள் வேண்ட

ஒருசிறை விடுத்தனை


ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்

முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை


ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

அறுகு சூடிக் கிளையோ னாயினை


ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

கொருகுரு வாயினை


ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென

எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்

நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

ஏரகத் திறைவ னென இருந்தனையே.

💢💢 💢💢💢💢


         பிரம்மனிடத்திலிருந்து மானுடப் பிறப்பில் ஒப்பற்ற ஆறு தனிச் சேய்களான வகையில் தோன்றியவன்தாய் தந்தை மரபுகளைப் பெற்று இருமரபினையும் ஒன்றாக்கியதுபோல் ஆறு முகங்களும் ஒரு சேரப் பெற்று சிவன்சக்தி என்ற இருவர் அம்சமாய் அவதரித்தவன்மூப்பு என்பது எப்பொழுதும் இன்றி குமரனாகவே இருந்தருள்பவன்அந்தணர்களுள் ஒப்பற்றவனாய் இருக்கின்றான்.    


பெருமிதத்தின் காரணமாக பரமதேவன் சிவபெருமானை பார்க்கச் சென்ற காலத்தில் குமரனை வணங்காமல் போகவே அவன் சினந்து அவனது தலைமுடியை ஒரு நொடிப்பொழுதில் களைந்து மொட்டையாக்கியவன்தனது தந்தையாகிய சிவபெருமான்திருமால்பரமன் மூவரும் எழுந்தருளி வந்து குமரனின் திருவடிகளில் வீழ்ந்து பிராத்திக்கவே ஒற்றைச் சிறையினின்றும் விடுவித்து அருளினான்.



            கண்ணிமைக்கும் பொழுதிற்குள்ளே பெரிய சிறகுகளையுடைய மயிலின் மீதேறிக் கடலாற் சூழப்பட்ட நிலவுலகம் அஞ்சும்படி சுற்றி வந்தவன்



    நான்கு பகுதிப்பட்ட தந்தங்களையும் மூன்றிடங்களிற் பெருகும் மதநீரையும் இரண்டு காதுகளையும் ஒப்பற்ற (ஒருதும்பிக்கையையும் உடைய மலை போன்ற ஐராவதத்தினையுடைய (காப்பில் வளர்ந்தபெண்ணாகிய தெய்வயானையை விரும்பித் திருமணம் செய்து கொண்டவன்.



            ஒரு வகையாகிய யானை வடிவத்திலேயே யானை உருவும் மானிட உருவும் ஆகிய இருவகையான வடிவம் தாங்கிய விநாயகர் தனக்கு முன் பிறந்தவனாக இருக்கும்படிதொங்குகின்ற வாயையுடைய யானை முகத்தோனும் ஐந்துகரங்களையுடைய கடவுளுமாகிய அறுகம்புல்லைச் சூடிக் கொண்டுள்ள விநாயகனுக்குத் தம்பியாய்  தோன்றியவன்.



            நான்கு வேதங்களும் தெரிய வைக்கின்ற  மூன்று கண்களையுடைய ஒளி வடிவினனாவனும்தீவினைகளைப் போக்கும் மருந்து போலானவனுமாகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற குருநாதனாக  விளங்கியவன்ஒருநாள் தந்தையார் பிரம தீர்த்தத்தில் நீராடச் செய்யச்சென்ற போது உடனழைத்துச் சென்ற அந்த நாளில்தோணிபுரத்து உமையம்மை இருமுலைகளிலும் பெருகிய பாலைப் பொற்கிண்ணத்தில் கொடுக்க அருந்தி, ‘இந்தப்பிள்ளை முத்தமிழிலும் வல்ல திறவோன்நாற்கவி பாடுதலிற் சக்கரவர்த்திஐம்புலன்களுக்கும் தலைவனாகிய மன்மதன்சண்முகனாகிய செவ்வேள்’ என்று சொல்லப்படும் படியும் மேன்மேல் எழுச்சிதரும் படியான அழகோடு சீகாழியில் தோன்றியவன்.


            
கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரால் பாலூட்டப் பெற்று வளர்க்கப் பெற்றவன்



இந்திரனுக்காக
நான்கு வேதங்களின் அம்சமாய்த் தோன்றியுள்ள – மூன்று பிளவுளதாகிக் கவர்த்த சிவந்த கொண்டையை உடையதான ஒப்பற்ற வேலாயுதத்தை கிரௌஞ்சகிரி இருதுண்டாகி விழும்படிச்  செலுத்தியவன்காவிரியாற்றின் வடக்குக்கரையில் அமைந்துள்ள சுவாமிமலையில் நித்தியவாசம் செய்து கொண்டிருக்கும் ‘நம : குமாராய’ என்று ஆறெழுத்து மந்திரத்தை இடைவிடாதுரைக்கின்ற அந்தணர்கள் நினது இரண்டு திருவடிகளையும் துதித்துப் புகழக்கூடிய  தனிப்பெருங்கடவுளாக வீற்றிருந்து அருள்பவன் என்று அருணகிரியார் குமரபெருமானின் புகழைப்பாடுகின்றார்.

                                                                    💢💢 💢💢💢💢

Comments

Popular posts from this blog

தொல்காப்பியரின் அறிவியல் பார்வை - பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்